தாதாசாஹேப் பால்கே

Dadasaheb_Phalke

தாதாசாஹேப் பால்கே அவர்கள், ‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர். 19 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து, முழு நீளப் படங்களான ‘ராஜா ஹரிச்சந்திரன்’, ‘மோகினி பஸ்மாசுர்’, ‘சத்யவான் சாவித்ரி’, ‘இலங்கை தகனம்’, ‘ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மா’ மற்றும் ‘கலிய மார்டான்’ போன்ற 95 திரைப்படங்களையும், 26 குறுந்திரைப்படங்களையும் இயக்கி, இந்திய சினிமாவை உலகளவில் பிரசித்தியடைய செய்தவர். சினிமாவில் தனது வாழ்நாள் பங்களிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கு, அவரது பெயரால் ‘தாதாசாஹேப் பால்கே விருதினை’ இந்திய அரசு, 1969 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்திய சினிமாவின் அங்கமாக இருந்த தாதாசாஹேப் பால்கே அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஏப்ரல் 30, 1870

பிறந்த இடம்: த்ரயம்பகேஸ்வர், நாசிக், மகாராஷ்டிரா, இந்தியா

இறப்பு: பிப்ரவரி 16, 1944

தொழில்: திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

 தாதாசாஹேப் பால்கே அவர்கள், இந்தியாவில் மகாராஷ்டிராவிலுள்ள நாசிக்கில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் த்ரயம்பகேஸ்வர் என்னும் இடத்தில் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி 1870 ஆம் ஆண்டில் ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் தண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பதாகும். அவரது தந்தை ஒரு சிறந்த கல்வியாளர் ஆவார்.

 ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

 தாதாசாஹேப் பால்கே அவர்கள், 1885 ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள சார் ஜே.ஜே. கலைப்பள்ளியில் சேர்ந்தார். 1890ல், ஜே.ஜே. பள்ளியிலிருந்து தேர்ச்சிப் பெற்றப் பின்னர், அவர் பரோடாவிலுள்ள கலா பவனில் சேர்ந்து, சிற்பம், பொறியியல், வரைதல், ஓவியம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றைப் பற்றி மிகவும் நுட்பமாகப் படித்தார்.

 பால்கேவின் ஆரம்பகாலப் பணிகள்

 கோத்ராவில், ஒரு சிறிய நகரப் புகைப்படக் கலைஞராக தனது தொழிலைத் தொடங்கிய தாதாசாஹேப் பால்கே அவர்கள், புபோனிக் பிளேக்கால் அவரது மனைவி மற்றும் குழந்தை இறந்தவுடன், அத்தொழிலைக் கைவிட்டார். அவர் விரைவிலேயே, லூமியர் பிரதர்ஸ் அவர்கள் நியமித்த 40 வித்தைக்காரர்களுள் ஒருவரான ஜெர்மனியை சேர்ந்த கார்ல் ஹெர்ட்ஸ் என்பவரை சந்தித்தார். அதன் பிறகு, அவருக்கு இந்திய தொல்பொருள் ஆய்வகத்தில், ஒரு வரைவாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. வரைவாளராகப் பணியில் ஈடுபட்ட அவர், தனது வேலை மற்றும் அதன் கட்டுப்பாடுகளால் அமைதியற்று, ஓய்வில்லாமல் இருந்ததால், அவ்வேலையை ராஜினாமா செய்து விட்டு, அச்சிடும் தொழிலை சொந்தமாகத் தொடங்கினார். அவர் கல் அச்சுக் கலை (lithography) மற்றும் எண்ணெய் வண்ண அச்சுப்படத்தில் (oleograph) நிபுணத்துவம் பெற்றிருந்ததால், உலகப் புகழ்பெற்ற ஓவியரான ராஜா ரவி வர்மாவிடம் வேலைக்கு சேர்ந்தார். பின்னர், பால்கே அவர்கள், தனது சொந்த அச்சகம் தொடங்கி, சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் பற்றி அறிய, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜெர்மனிக்கு சென்றார்.

 திரைப்பட வாழ்க்கை

 தனது தொழிலில் தாதாசாஹேப் பால்கே அவர்களது நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும், ‘தி லைஃப் ஆஃப் தி கிரிஸ்ட்’ என்ற ஊமைப்படத்தைப் பார்த்து, அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால், தனது தொழிலைக் கைவிட்டு, திரையில் இந்திய கடவுள்களைக் கற்பனையாகக் கூறும், நகரும் படங்களின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். 1912ல் பால்கே அவர்கள், அவரது முதல் படமான, ‘ராஜா ஹரிச்சந்திராவை’ எடுத்தார். இந்திய திரைப்பட துறையின் தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக, இத்திரைப்படம், மே 3, 1913 ஆம் ஆண்டில் மும்பை காரநேஷன் சினிமாவில் முதன்முதலில் திரையில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. இதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர், ராமச்சந்திர கோபால் அவர்களின் படமான ‘பன்டாலிக்’ அதே திரையரங்கில் வெளியிடப்பட்டாலும், முதல் உள்நாட்டு இந்திய திரைப்படத்தைத் தயாரித்தப் பெருமை, தாதாசாகேப் பால்கே அவர்களையே சேரும், ஏனென்றால், “பண்டாலிக்” திரைப்படம் பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

 தனது புதிய கலையில் மீண்டும் வெற்றிக் கண்ட பால்கே அவர்கள், புதிய திறமுள்ள அம்சங்கள் நிறைந்த பல ஊமைப்படங்கள், குறும்படங்கள், ஆவண அம்சம் நிரம்பிய படங்கள், நகைச்சுவை மற்றும் கல்விப் படங்கள் போன்றவற்றை எடுக்கத் தொடங்கினார். அவருடைய படங்கள் அனைத்தும் நிதி நிலைப்புத் தன்மையைக் கொண்டதால், பல்வேறு வர்த்தகர்களை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல், அவருடன் இணைந்து பணிபுரியவும் வழிவகுத்தது.

 ஹிந்துஸ்தான் பிலிம்ஸ் நிறுவனம்

 தாதாசாஹேப் பால்கே அவர்கள், ஐந்து வர்த்தகர்களுடன் இணைந்து தனது முதல் பட நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் பிலிம்சை’ மும்பையில் தொடங்கினார். இதன் மூலமாக, தொழிலின் நிதி அம்சத்தை அவரது கூட்டாளிகள் பார்த்துக் கொண்டனர், மேலும் படைப்பம்சத்தை அவர் கவனித்துக் கொண்டார். இது அவரது முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சி இத்தோடு நின்று விடாமல், அவர் ஒரு மாடல் ஸ்டுடியோ ஒன்றையும் நிறுவி பல தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகயருக்குப் பயிற்சி அளித்தார். சுமூகமாக சென்று கொண்டிருந்தது ஹிந்துஸ்தான் பில்ம்ஸ் நிறுவனம். ஆனால், சிறிது காலம் கழித்து, பால்கே தனது கூட்டாளிகளுடன் மீண்டு வர முடியாத கருத்து வேறுபாட்டில் மாட்டிக்கொண்டார். இதிலிருந்து வெளிவரும் நோக்கமாக, 1920 ஆம் ஆண்டில், பால்கே, இந்துஸ்தான் பிலிம்ஸில் இருந்து ராஜினாமா செய்து, சினிமாவில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். சினிமாவிலிருந்து ஓய்வுப் பெற்றிருந்தாலும், அவர் தனது கலை ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காமல், ‘ரங்க்பூமி’ என்றொரு நாடகத்தை எழுதினார். எந்தவொரு துறையில் நுழைந்தாலும், வெற்றிக் காணும் திறன் படைத்த பால்கே அவர்களின் இந்த நாடகமும், பலராலும் பேசப்பட்டு, எண்ணிலடங்கா பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது. அவரது கற்பனைத் திறனும், படைப்பம்சமும் இல்லாமல், இந்துஸ்தான் பிலிம்ஸ் ஆழமான நிதி இழப்பு சந்தித்தது. இதனால், அவரது கூட்டாளிகள் அவரை திரும்ப வருமாறு அவரை மிகவும் வற்புறுத்திக் கேட்டதால், அவர் மீண்டும் ஹிந்துஸ்தான் பிலிம்ஸில் இணைந்தார். ஒரு மனக்கசப்பால் பிரிந்து, மீண்டும் இணைந்ததால், பால்கே அந்நிறுவனத்தில் ஒரு சில படங்களையே இயக்கிய பின்னர், அதனை விட்டு விலகினார்.

இறப்பு

 இந்திய திரைப்பட துறையின் தந்தையாகக் கருதப்பட்ட தாதாசாஹேப் பால்கே அவர்களால் பேசும் படங்களில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை சமாளிக்க முடியாமல், பெரிதும் பாதிக்கப்பட்டார். 1932ல் வெளியிடப்பட்ட ‘சேதுபந்தன்’ என்ற திரைப்படமே அவரது கடைசி பேசும் படம். இப்படம், பின்னர் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. 1936லிருந்து 1938 வரை, அவர் அவரது கடைசி படமான ‘கங்காவதாரன்’ (1937) என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். 1944 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அவர் நாசிக்கில் இயற்கை எய்தினார்.

 காலவரிசை

  • 1870: நாசிக்கில் இருக்கும் த்ரயம்பகேஸ்வரில் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி  ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார்.
  • 1885: மும்பையில் உள்ள சார் ஜே.ஜே. கலைப்பள்ளியில் சேர்ந்தார்.
  • 1890: பரோடாவிலுள்ள கலா பவனில் சேர்ந்து, சிற்பம், பொறியியல், வரைதல், ஓவியம் மற்றும் புகைப்படம் பற்றி மிகவும் நுட்பமாகப் படித்தார்.
  • 1912: அவரது முதல் படமான, ‘ராஜா ஹரிச்சந்திராவை’ தயாரித்தார்.
  • 1913: மே 3 ஆம் தேதி, மும்பை காரநேஷன் சினிமாவில் முதன்முதலில் திரையில் ‘ராஜா ஹரிச்சந்திரா’ வெளியிடப்பட்டது.
  • 1920: இந்துஸ்தான் பிலிம்ஸில் இருந்து ராஜினாமா செய்தார்.
  • 1932: ‘சேதுபந்தன்’ என்ற அவரது கடைசி பேசும் படம் வெளியானது.
  • 1936 – 1938: அவரது கடைசி படமான ‘கங்காவதாரன்’ (1937) என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.
  • 1944: பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அவர் நாசிக்கில் இயற்கை எய்தினார்.

Comments

  1. Shiva A says:

    knowledge purpose