விஜயகாந்த்

Vijayakanth

‘புரட்சிக் கலைஞர்’ எனவும், ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த அரசியல்வாதியும் ஆவார். 2005 ஆம் ஆண்டு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்னும் கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நூறாவது நாள்’, ‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘ஊமைவிழிகள்’, ‘செந்தூரப் பூவே’, ‘சத்ரியன்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘என்னாசை மச்சான்’, ‘உளவுத்துறை’, ‘வானத்தைப் போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களாகப் போற்றப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், ‘விருத்தாசலம்’ தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டு ‘ரிஷிவந்தியம்’ தொகுதியிலும் வெற்றிப்பெற்று, தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். ஒரு நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் நாட்டு அரசியலில் தே.மு.தி.க கட்சியை உருவாக்கி, குறுகிய காலத்திற்குள் மாபெரும் வெற்றிக்கண்ட விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா, அரசியல் பணிகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஆகஸ்ட் 25, 1952

இடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர் மற்றும் அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 

‘விஜயராஜ்’ என்னும் இயற்பெயர்கொண்ட விஜயகாந்த் அவர்கள், 1952  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை  மாவட்டதிலுள்ள “திருமங்கலம்” என்ற இடத்தில் ‘கே.என். அழகர்சிவாமி நாயிடுக்கும்’ ஆண்டாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய பள்ளிப்படிப்பை தேவகோட்டையிலுள்ள ‘தி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும்’, மதுரையிலுள்ள ‘நாடார் உயர்நிலைப் பள்ளியிலும்’ பயின்றார். இளம் வயதிலேயே சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால், படிப்பில் அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. இதனால் தன்னுடைய படிப்பை, பத்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, அப்பா பார்த்துவந்த அரிசி ஆலை நிர்வாகத்தை சிறிதுகாலம் கவனித்து வந்தார்.

திரைப்படத்துறையில் விஜயகாந்தின் பயணம்

1978 ஆம் ஆண்டு இயக்குனர் ‘காஜா’ அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த, ‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தில், முதன் முதலாக ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். 1979-ல் ‘ஓம்சக்தி’ மற்றும் 1980-ல் ‘தூரத்து இடிமுழக்கம்’ போன்ற படங்களில் நடித்த அவருக்கு, 1981 ஆம் ஆண்டு எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி நாயகனாக தன் பெயரை பதிவு செய்த அவர், ‘மனக்கணக்கு’, ‘சிவப்பு மாலை’, ‘நீதி பிழைத்தது’, ‘பார்வையின் மறுபக்கம்’, ‘ஆட்டோ ராஜா’, ‘சாட்சி’, ‘துரை கல்யாணம்’, ‘நாளை உனது நாள்’, ‘100வது நாள்’, ‘ஊமை விழிகள்’ போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்வந்தார்.

கேப்டன் எனப் பெயர்வரக் காரணம்

‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்த இதில், ஒரு காட்டிலாக்கா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், இவர் மக்களாலும், திரையுலகத்தினராலும் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.

இவர் நடித்த சிலத் திரைப்படங்கள்

‘இனிக்கும் இளமை’ (1978), ‘ஓம் சக்தி’ (1979), ‘சட்டம் ஒரு இருட்டறை’ (1981), ‘சாட்சி’ (1983), ‘100வது நாள்’ (1984), ‘சத்தியம் நீயே’ (1984), ‘தீர்ப்பு என் கையில்’ (1984), ‘வைதேகி காத்திருந்தால்’ (1984), ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே’ (1985), ‘நானே ராஜா நானே மந்திரி’ (1985), ‘அம்மன் கோயில் கிழக்காலே’ (1986), ‘ஊமைவிழிகள்’’ (1986), ‘கரிமேட்டுக் கருவாயன்’ (1986), ‘தழுவாத கைகள்’ (1986), ‘சட்டம் ஒரு விளையாட்டு’ (1987), ‘சிறை பறவை’ (1987), ‘செந்தூரப் பூவே’ (1988), ‘தென்பாண்டி சீமையிலே’ (1988), ‘பூந்தோட்ட காவல்காரன்’ (1988), ‘சத்ரியன்’ (1990), ‘சந்தனக் காற்று’ (1990), ‘புலன் விசாரணை’ (1990), ‘கேப்டன்  பிரபாகரன்’ (1991), ‘மாநகர காவல்’ (1991), ‘சின்ன கவுண்டர்’ (1992), ‘ஏழைஜாதி (1993), ‘கோயில் காளை’ (1993), ‘செந்தூரப் பாண்டி’ (1993), ‘ஆனஸ்ட் ராஜ்’ (1994), ‘என் ஆசை மச்சான்’ (1994), ‘சேதுபதி ஐபிஎஸ்’ (1994), ‘அலெக்ஸ்சாண்டர்’ (1996), ‘உளவுத்துறை’ (1998), ‘வானத்தைப்போல’ (2000), ‘ரமணா’ (2002), ‘சொக்கத்தங்கம்’ (2003) போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களாகும்.

இல்லற வாழ்க்கை

1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விஜயகாந்த் அவர்களுக்கு, விஜய் பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

அரசியல் வாழ்க்கை

தமிழ் சினிமாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, ‘புரட்சி கலைஞன்’ என பெயர்பெற்ற அவர், எம்ஜிஆரின் தீவிர ராசிகனாக மட்டுமல்லாமல், 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மதுரையில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்னும் கட்சியை ஆரம்பித்து, அரசியலிலும் கால்பதிக்க துவங்கினார். 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இவரின் தே.மு.தி.க. கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு, ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு அடுத்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. விருத்தாசலம் தொகுதியில் முதற்களம் கண்ட விஜயகாந்த் அவர்கள், தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட சுமார் 13,000 வாக்குகள் அதிகம் பெற்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். பிறகு 2011 ஆம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்து, களம் கண்ட இவருடைய கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தி.மு.க கட்சியை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்கட்சி அந்தஸ்தினைப் பெற்றது. ஆனால் குறுகிய நாட்களுக்குள் அ.தி.மு.க-வுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியை முறித்துகொண்ட விஜயகாந்த் அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

Comments

  1. mano says:

    thank you for the nice information about Captain

  2. SRIDHARA says:

    varungala mudalamacharaga vara tamil nattin oru izhaijan aaga ennudaya valthukal thalaivare!

  3. vijayakumar says:

    நல்லவர் வெல்வது நிச்சயம்