காந்தி ஜெயந்தி

Gandhi-Jayanti

நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் ‘தேசத் தந்தை’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம். இவ்விழா, அனைத்து மதத்தவர்களும் வாழும் நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய விழாவாகக் கருதப்படுகிறது. நம் நாட்டின் தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடப்படும் இத்தினத்தை, ‘சர்வதேச அஹிம்சை தினமாக’ உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. இந்தியத் தலைவர்களில் எப்போதும் நினைவில் நிற்கும் இவர், அஹிம்சை மற்றும் சத்யாக்ரஹ வழிகளைப் பின்பற்றி, நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததால், அவ்விரு கொள்கைகளுக்காக உலகப் பிரசித்திப் பெற்றார். இதன் மூலமாக அவ்விரு கொள்கைகளைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதல்ல; மேலும் அக்கொள்கைகளே ஒருவரின் வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான மிகவும் பயனுள்ள முறைகள் என்பதை நிரூபித்தார். அவரின் இந்த நம்பிக்கையே, அனைவரும் அவரை கவனிக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல், வரலாறு காணாத மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவராகப் போற்றச் செய்தது. அவருடைய தனித்துவமான கொள்கைகளால் உலகளவில் உள்ள பெருந்தளைவர்களான மார்ட்டின் லூதர் கிங், ஜேம்ஸ் லாசன், நெல்சன் மண்டேலா, போன்ற பலரும் ஈர்க்கப்பட்டதால், அவர் இன்றளவும் உலகம் முழுவதும் அனைவரின் மனத்திலும் நிலைத்து நிற்கிறார் .இப்படிப்பட்ட பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. காந்தி மற்றும் காந்தி ஜெயந்தி பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.

காந்திஜி பற்றிய சில தகவல்கள்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கிய அவர், தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார். பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி, பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், ஆங்கிலேயர்களிடமிருந்து நமது நாட்டை மீட்க அஹிம்சை வழியில் போராடினார்.

அதன் பின்னர், இந்தியா திரும்பிய அவர், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் நோக்கமாக, 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ‘ரவ்லத் சட்டம்’ மற்றும் ‘ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு’ குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ‘ஒத்துழையாமையை இயக்கத்தினை’ 1922  ஆம் ஆண்டில் தொடங்கினார். இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது. இவ்வியக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் ‘சௌரி சௌரா’ என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அந்நியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 ஆம் ஆண்டு மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இதனால், காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினைத் தொடங்கிய அவரின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது.

காந்தி ஜெயந்தி விழா மற்றும் கொண்டாட்டம்

காந்தி ஜெயந்தி திருநாளன்று, நமது மக்கள், தேசத்தந்தை அஞ்சலி செலுத்தும் விதமாக பல பிரார்த்தனை சேவைகளையும், சமூக செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து நடத்துவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பை கெளரவிக்கவும் விதமாக, கலைப் பிரியர்கள் காந்திய கொள்கைகள் மற்றும் சுதந்திரத்திற்காக அவர் கையாண்ட வழிமுறைகளைப் பிரதிபலிக்கும் கண்காட்சிகளை  வருடந்தோறும் நடத்தி வருகின்றனர். சில இடங்களில், அஹிம்சை வழியில் செல்வோருக்கு, விருதுகளை வழங்குவர். காந்தியின் வாழ்க்கை மற்றும் அறவழிப் போராட்டங்களை இளந்தலைமுறையினருக்குக் கற்பிக்க எண்ணும் சிலர், பல இடங்களில் காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய சிறப்பு உரையாற்றுவர்.

பள்ளி, கல்லூரிகளில் காந்தி ஜெயந்தி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 2 ஆம் தேதி ‘காந்தி ஜெயந்தி’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை, தேசிய விடுமுறை தினமாக அரசு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் அறிவித்திருக்கிறது. மேலும், காந்தியின் பெருமையை உலகமே அறியும் வண்ணம், அக்டோபர் 2 ஆம் தேதியை, ‘சர்வதேச அகிம்சை தினமமாக’ ஐக்கிய நாடுகள் பொது சபை (UNGA) சமீபத்தில் அறிவித்து, மென்மேலும் காந்திக்கும், காந்திய கொள்கைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக, அன்றைய தினத்தன்று நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும். காந்திஜியின் அறநெறிகள் அனைவருக்கும் பரவ வேண்டுமென்று எண்ணி, மக்கள் தங்களது பிரியமானவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.

காந்தியின் அறவழி சென்று, நாமும் வளமான இந்தியாவை மேலும் செழிக்க செய்வோம்!!!